செய்திகள்

இமாசலப்பிரதேசம்: புதிய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் 5 மந்திரிகள் மீது குற்ற வழக்குகள்

Published On 2017-12-27 21:44 GMT   |   Update On 2017-12-27 21:44 GMT
இமாசலப்பிரதேசம் மாநிலத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மந்திரி சபையில் 5 மந்திரிகள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.
சிம்லா:

இமாசலப்பிரதேசம் மாநிலத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மந்திரி சபையில் 5 மந்திரிகள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த இமாச்சலப்பிரதேசம் மாநில சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 68 இடங்களில் பா.ஜ.க. 44 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை பலத்தை பெற்றது.

இதற்கிடையே, இமாச்சலின் 13-வது முதல்வராக ஜெய்ராம் தாக்கூர் இன்று தனது அமைச்சரவையுடன் பதவியேற்றுக் கொண்டார். தாக்கூர் மற்றும் 10 மந்திரிகளுக்கு மாநில ஆளுநர் ஆச்சாரியா தேவ் வ்ராட் பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

இதில் பிரதமர் மோடி, பா.ஜ.க தலைவர் அமித்ஷா, பா.ஜ.க ஆளும் மாநில முதல்வர்கள், துணை முதல்வர்கள், மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, சுஷ்மா ஸ்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



இந்நிலையில், ஜனநாயக சீர்திருத்த சங்கம் மற்றும் இமாசலப்பிரதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்பும் சேர்ந்து வெளியிட்ட அறிக்கையில், புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள மந்திரி சபையில் பதவியேற்றுக் கொண்ட 12 மந்திரிகளில் 5 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது என்றும், 8 எம்.எல்.ஏ.க்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த மந்திரி சபையில் ஒரே ஒரு பெண் மந்திரி இடம்பெற்றுள்ளார் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
Tags:    

Similar News