செய்திகள்

நீர்ப்பாசன திட்டங்களுக்காக தமிழகத்துக்கு கடன்: உலக வங்கி வழங்க ஒப்பந்தம்

Published On 2017-12-27 02:13 GMT   |   Update On 2017-12-27 02:13 GMT
தமிழக நீர்ப்பாசன திட்டங்கள் நவீனமயமாக்கலுக்காக உலக வங்கி ரூ.2,035 கோடி கடன் வழங்குகிறது. இதற்காக மத்திய அரசு, தமிழக அரசு, உலக வங்கி ஆகியவை இடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.
புதுடெல்லி :


தமிழக நீர்ப்பாசன திட்டங்கள் நவீனமயமாக்கலுக்காக உலக வங்கி ரூ.2,035 கோடி கடன் வழங்குகிறது. இதற்காக மத்திய அரசு, தமிழக அரசு, உலக வங்கி ஆகியவை இடையே முத்தரப்பு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.

இந்த திட்டத்தின்படி, தமிழகத்தில் சுமார் 4,800 நீர்ப்பாசன குளங்கள், 477 தடுப்பணைகள் அதிக நீரை தேக்கி வைக்கும் வகையில் மறுசீரமைக்கப்பட்டு நவீனப்படுத்தப்படும். இதனால், தமிழகத்தில் உள்ள சுமார் 5 லட்சம் விவசாயிகள் பலன் அடைவார்கள். இவர்களில் பெரும்பாலானோர் சிறு, குறு விவசாயிகள் என்பதால், அவர்கள் நீர் மேலாண்மையை மேம்படுத்தி, சீதோஷ்ணநிலையை தாங்கும் தொழில் நுட்பத்தை பின்பற்ற வழிவகை உருவாகும் என்று டெல்லியில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், தற்போது பகுதி அளவு நீர்ப்பாசனம் நடந்து வரும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஹெக்டேர் நிலங்களில், இத்திட்டத்தால், முழுஅளவில் நீர்ப்பாசனம் நடைபெறும் என்று பொருளாதார விவகார துறை கூடுதல் செயலாளர் சமீர் குமார் காரே தெரிவித்தார்.
Tags:    

Similar News