செய்திகள்
விவசாயிகள் தற்கொலைக்கு மத்திய அரசுதான் காரணம்: அன்னா ஹசாரே குற்றச்சாட்டு
பெருகிவரும் விவசாயிகள் தற்கொலைக்கு மத்திய அரசுதான் காரணம் என காந்தியவாதியும், சமூக ஆர்வலருமான அன்னா ஹசாரே குற்றம்சாட்டியுள்ளார்.
லக்னோ:
காந்தியவாதியும், சமூக ஆர்வலரும், ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் சட்டம் தேவை என வலியுறுத்தி வருபவருமான அன்னா ஹசாரே உத்தரப்பிரதேசம் மாநிலம், சம்பல் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகள் மகா பஞ்சாயத்து நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார்.
நாட்டில் தற்போது விவசாயிகளின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாகவும், மோசமாகவும் உள்ளதாக குறிப்பிட்ட ஹசாரே, பெருகிவரும் விவசாயிகள் தற்கொலைக்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்தார்.
விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பதற்கு சாமிநாதன் கமிஷன் அளித்த பரிந்துரைகளை அமல்படுத்துமாறு மத்திய அரசுக்கு தான் பலமுறை கடிதங்கள் எழுதியுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர் இதுவரை அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதை கண்டித்து வரும் மார்ச் மாதம் 23-ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருப்பேன் என்றும் அறிவித்துள்ளார்.