செய்திகள்
பழிவாங்கும் அரசியலில் பா.ஜனதா ஈடுபட கூடாது: அசோக் சவான் கருத்து
தனிப்பட்ட அளவில் பழிவாங்கும் அரசியலில் பா.ஜனதா ஈடுபட கூடாது என்று பா.ஜனதாவுக்கு அசோக் சவான் கண்டனம் தெரிவித்தார்.
மும்பை :
ஆதர்ஷ் ஊழல் வழக்கில் முன்னாள் முதல்-மந்திரி அசோக் சவானுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லாததால், அவர் மீது விசாரணை நடத்த கவர்னர் வித்யாசாகர் ராவ் அனுமதி அளித்ததை மும்பை ஐகோர்ட்டு நேற்று ரத்து செய்து தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்புக்கு காங்கிரஸ் மாநில தலைவர் அசோக் சவான் மகிழ்ச்சி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த குற்றச்சாட்டுகளால் கடந்த 7 ஆண்டுகளாக நான் தனிப்பட்ட முறையில் கடுமையாக பாதிக்கப்பட்டேன். நான் முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகினாலும், கட்சி பணியில் தீவிரமாக ஈடுபட்டேன். எனக்கு ஆதரவாக இருந்த என்னுடைய தொகுதி மக்களுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்.
இந்த தீர்ப்பின் மூலம் நீதித்துறை மீது நான் வைத்திருக்கும் நம்பிக்கை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. தீர்ப்பு திருப்தி அளிக்கிறது. முன்னாள் கவர்னரின் முடிவை புறக்கணித்து, எனக்கு எதிராக விசாரணை நடத்த தற்போதைய கவர்னர் அனுமதி அளித்தார்.
தனிப்பட்ட அளவில் பழிவாங்கும் அரசியல் நடவடிக்கையில் பாரதீய ஜனதா ஈடுபட கூடாது.
இவ்வாறு அசோக் சவான் தெரிவித்தார்.