செய்திகள்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு பயணம்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரண்டு நாள் பயணமாக நாளை உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு செல்கிறார்.
புதுடெல்லி:
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரண்டு நாள் பயணமாக நாளை உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு செல்கிறார். இந்த பயணத்தின் போது லக்னோ மற்றும் அலகாபாத் நகருக்கு செல்வார் என கூறப்பட்டுள்ளது.
புதுடெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நாளை காலை உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோ சென்றடையும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், லக்னோ நகரில் உள்ள பதந்த் பிரக்யானந்த்ஜியின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார். அதன்பின் லக்னோவில் உள்ள அம்பேத்கர் பல்கலைகழகத்தில் நடைபெறும் 7-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். தொடர்ந்து லக்னோவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அம்பேத்கர் பவனை திறந்து வைக்கிறார்.
அன்றே அலகாபாத் செல்லும் ஜனாதிபதி, சந்திர சேகர் ஆசாத் பூங்காவில் அமைக்கப்பட்டிருக்கும் சுதந்திரப் போராட்ட தியாகி சந்திரசேகர ஆசாத்தின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அதைத்தொடர்ந்து அலகாபாத்தில் உள்ள மோதிலால் நேரு தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் 14-வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார்.
நாளை மறுநாள் அலகாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் புதிதாக தொடங்கப்பட உள்ள நியாய-கிராம் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டும் ஜனாதிபதி, அன்று இரவு டெல்லி திரும்புவார் என ஜனாதிபதி மாளிகை இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.