செய்திகள்
ஏ.கே.அந்தோணியுடன் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் சந்திப்பு: உடல்நலம் விசாரித்தார்
மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் பாதுகாப்பு துறை மந்திரியுமான அந்தோணியை, கேரளா முதல் மந்திரி பினராயி விஜயன் இன்று டெல்லியில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.
புதுடெல்லி:
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் இருப்பவர் ஏ.கே.அந்தோணி (76).
கேரள மாநில முதல்வராகவும், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது பாதுகாப்பு துறை மந்திரியாகவும் பதவி வகித்தவர்.
இதற்கிடையே, ஏ.கே.அந்தோணி அவரது வீட்டில் கடந்த 29-ம் தேதி திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து, அவரை உடனடியாக டெல்லி ராம் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பி ஓய்வெடுத்து வருகிறார்.
இந்நிலையில், கேரளா முதல் மந்திரி பினராயி விஜயன் டெல்லி சென்றார். அங்கு ஏ.கே.அந்தோணியை அவரது வீட்டில் சென்று சந்தித்து உடல்நலம் விசாரித்தார். அப்போது முதல் மந்திரியிடம், ஒக்கி புயலுக்கான நிவாரண நிதியாக ரூ.50 ஆயிரம் வழங்கினார் அந்தோணி.