செய்திகள்

17 வயது மாணவியை கடத்தி 10 நாட்கள் சிறை வைத்து கற்பழிப்பு: 4 பேர் கைது

Published On 2017-11-16 02:37 GMT   |   Update On 2017-11-16 02:38 GMT
17 வயது நிரம்பிய மாணவியை கடத்தி 10 நாட்கள் சிறை வைத்து கற்பழித்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு:

பெங்களூருவில் வசித்து வருபவர் 17 வயது இளம்பெண். கடந்த மாதம்(அக்டோபர்) 26-ந் தேதி கல்லூரிக்கு சென்ற இந்த மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாயமான தங்களின் மகளை அக்கம்பக்கத்து வீடுகள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தேடிப்பார்த்தனர். ஆனால், எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. மாணவியின் தோழிகளிடம் விசாரித்தபோதும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதனால், தங்களது மகளை யாரோ கடத்திச் சென்று உள்ளனர் என்று மாணவியின் பெற்றோர் கே.ஆர்.புரம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், காடுகோடியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் மாயமான மாணவி சிறை வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார் தங்கும் விடுதியை சோதனையிட்டனர். அப்போது, ஒரு அறையில் மாணவி சிறை வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து, மாணவியை போலீசார் மீட்டனர். மேலும், மாணவியை கடத்திய மர்மநபர்கள் தங்கும் விடுதியில் சிறைவைத்து அவரை கற்பழித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

இந்த மாணவியை அவருடைய தோழி கடந்த 26-ந் தேதி விருந்து ஒன்றுக்கு அழைத்துள்ளார். ஒயிட்பீல்டு ரெயில் நிலையம் அருகே வரும்படி அவர் கூறியுள்ளார். இதை ஏற்றுக்கொண்ட மாணவி இரவு 8 மணிக்கு ஒயிட்பீல்டு ரெயில் நிலையம் அருகே சென்றார். அப்போது, அங்கு நின்ற 2 பேர் மாணவியிடம் பேசியுள்ளனர். ராகவேந்திரா, சாகர் என அவர்கள் தங்களின் பெயர்களை கூறியதோடு, அவருடைய தோழியின் நண்பர்கள் என மாணவியிடம் அறிமுகம் செய்து கொண்டனர்.

மேலும், விருந்து நடைபெறும் இடமான காடுகோடியில் உள்ள தங்கும் விடுதிக்கு அழைத்துச் செல்வதாக அவர்கள் கூறவே மாணவியும் அவர்களுடன் புறப்பட்டுள்ளார். தங்கும் விடுதியில் உள்ள ஒரு அறையின் அருகே மாணவி காத்து நின்றார்.

இந்த வேளையில், அங்கு வந்த சாகர், ராகவேந்திரா மற்றும் அவர்களின் நண்பர் மஞ்சு ராஜ் ஆகியோர் மாணவியை விடுதி அறையில் வைத்து கற்பழித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சம்பவம் குறித்து அறிந்த தங்கும் விடுதி உரிமையாளரும் மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக சொல்லப்படுகிறது. அதன்பின்னர் 4 பேரும் கடந்த 10 நாட்களாக மாணவியை சிறை வைத்து பாலியல் கொடுமை செய்துள்ளனர். கடந்த 4-ந் தேதி மாணவி மீட்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் மாணவியை கடத்தி சிறைவைத்து கற்பழித்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், அவர்கள் உடுப்பியை சேர்ந்த ராகவேந்திரா (வயது 27), தாவணகெரேயை சேர்ந்த சாகர்(22), மைசூருவை சேர்ந்த மஞ்சு ராஜ்(22), மேற்கு வங்காளத்தை சேர்ந்தவரும், தனியார் தங்கும் விடுதி உரிமையாளருமான மனேரஞ்சன் பண்டித்(52) ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், விசாரணை நடைபெற்று வருகிறது. 
Tags:    

Similar News