செய்திகள்

பேரறிவாளனை விடுவிப்பது தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?: சுப்ரீம் கோர்ட் கேள்வி

Published On 2017-11-14 12:00 GMT   |   Update On 2017-11-14 12:00 GMT
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? என்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் விளக்கம் கேட்டுள்ளது.
புதுடெல்லி:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தந்தை குயில்தாசன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சமீபத்தில் இருமாத காலம் பேரறிவாளன் பரோலில் வெளியே வந்திருந்தார். பரோல் காலம் முடிந்ததும் மீண்டும் சிறை திரும்பினார்.

இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை  நிறுத்தி வைக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பேரறிவாளன் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

வெடிகுண்டில் வைக்கப்பட்ட பேட்டரி நான் வாங்கித்தந்தது என்பது நிரூபிக்கப்படவில்லை. குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில், எனக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எனவே, தண்டனையை நிறுத்தி வைக்கவேண்டும் என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவின் சின்ஹா ஆகியோரை கொண்ட சுப்ரீம் கோர்ட் அமர்வு, பேரறிவாளனை விடுவிப்பது தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? என்பது தொடர்பாக இரு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு கேட்டு கொண்டதுடன் இவ்வழக்கின் மறுவிசாரணையை டிசம்பர் ஆறாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பேரறிவாளன் உள்பட 7 ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். அதை மத்திய அரசு தடுத்து விட்டது நினைவிருக்கலாம்.
Tags:    

Similar News