செய்திகள்
அமித்ஷா மகன் தொடர்ந்த அவதூறு வழக்கு: தனியார் இணையதள ஊடகத்திற்கு சம்மன்
அமித்ஷா மகன் ஜெய்ஷாவுக்கு சொந்தமான நிறுவனத்தின் லாபம் பண்மடங்கு உயர்ந்ததாக செய்தி வெளியிட்ட தனியார் இணையதளம் மீது அவர் தொடர்ந்த அவதூறு வழக்கில் அகமதாபாத் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
அகமதாபாத்:
பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷாவின் மகனுக்கு சொந்தமான டெம்பிள் எண்டர்பிரைசஸ் பிரைவே லிமிடெட் நிறுவனம் முந்தைய 2013-14-ம் நிதி ஆண்டில் ஈட்டிய லாபத்தை விட 2015-16-ம் நிதி ஆண்டில் 16 ஆயிரம் மடங்கு அதிகமாக லாபத்தை அந்நிறுவனம் ஈட்டியுள்ளது என தனியார் இணையதள ஊடகம் ஒன்றில் செய்திகள் வெளியானது.
இவ்விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் விசாரிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால், இந்த செய்தியை மறுத்த பா.ஜ.க சம்பந்தப்பட்ட இணையதள ஆசிரியர் மற்றும் நிர்வாகி மீது 100 கோடி ரூபாய் மான நஷ்ட வழக்கு தொடரப்படும் என தெரிவித்தது.
இதையடுத்து, அகமதாபாத் நீதிமன்றத்தில் சம்மந்தப்பட்ட இணையதள ஊடக ஆசிரியர், உரிமையாளர், கட்டுரையாளர் உள்ளிட்ட 7 பேர் மீது அமித்ஷா மகன் ஜெய்ஷா கடந்த 9-ம் தேதி அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில், நேற்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் தனியார் இணையதளத்திற்கு அகமதாபாத் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.