செய்திகள்

திருவனந்தபுரம் அருகே அரசுவேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண் கற்பழிப்பு

Published On 2017-10-16 04:59 GMT   |   Update On 2017-10-16 04:59 GMT
திருவனந்தபுரம் அருகே அரசுவேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்ணை கற்பழித்த கம்யூனிஸ்டு பிரமுகர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் பத்தனம்திட்டை அருகே உள்ள திருவல்லா பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளராக இருப்பவர் சஜிமோன் (வயது 40). இவருக்கு திருமணமாகி மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.

அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண் தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். அந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அந்த பெண்ணிற்கு திடீரென்று வயிற்றுவலி ஏற்பட்டது.

இதனால் அவரை அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு உறவினர்கள் அழைத்துச் சென்றனர். அங்கு அந்த பெண்ணை பரிசோதித்த டாக்டர் அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறினார். இதை கேட்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கணவர் வெளிநாட்டில் இருக்கும் சூழ்நிலையில் அவர் எப்படி கர்ப்பம் அடைந்தார் என்று உறவினர்கள் அந்த பெண்ணிடம் கேட்டனர். அப்போது அவர் கம்யூனிஸ்டு செயலாளரான சஜிமோன் தனக்கு அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி கற்பழித்ததாகவும் ஆனால் தனக்கு வேலை வாங்கித் தரவில்லை என்று கூறினார்.

இதைதொடர்ந்து இளம்பெண்ணை ஏமாற்றி கற்பழித்ததாக சஜிமோன் மீது திருவல்லா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது சஜிமோன் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News