செய்திகள்
பீகாரில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 900 கிலோ கஞ்சா பறிமுதல்
பீகார் மாநிலத்தில் லாரியில் கடத்தி வரப்பட்ட 900 கிலோ எடையுள்ள கஞ்சா, போலீசார் நடத்திய வாகன சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்டது.
பாட்னா:
இந்தியாவில் சமீபகாலமாக போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருகிறது. இதை தடுத்து நிறுத்த போலீசார் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளின்போது ஆங்காங்கே போதைப்பொருட்கள் சிக்குகின்றன.
இந்நிலையில், பீகார் மாநிலத்தில் வாகனம் மூலம் போதை பொருள் கடத்தல் நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, அம்மாநிலத்தில் பெகுசராய் மாவட்டத்திற்குட்பட்ட பாச்வாரா கிராமத்தில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிரக்கை போலீசார் தடுத்தி நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த வாகனத்தில் கஞ்சா கடத்திவரப்பட்டதை போலீசார் கண்டுபிடித்தனர். அதைத்தொடர்ந்து, போதைப்பொருளை பறிமுதல் செய்த போலீசார் அந்த வாகன ஒட்டுனரையும் கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் அளவு 900 கிலோ இருக்கும் எனவும் அதன் மதிப்பு ஒரு கோடி ரூபாய் எனவும் கூறப்படுகிறது.