செய்திகள்

மேற்குவங்கத்தில் புளுவேல் விளையாட்டால் விபரீதம் - பள்ளி மாடியில் இருந்து குதித்த மாணவன்

Published On 2017-09-12 20:41 GMT   |   Update On 2017-09-12 20:41 GMT
மேற்குவங்க மாநிலத்தில் புளுவேல் ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையான மாணவன் பள்ளி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளான்.
கொல்கத்தா:

சமீபத்தில் உலகம் முழுவதும் ‘புளூவேல்’ (நீலத்திமிங்கலம்) என்ற இணைய தள விளையாட்டு பரவி வருகிறது. இதில், இளைஞர்களும், மாணவர்களும் தங்களை பதிவு செய்து விளையாடி வருகின்றனர். ‘புளூவேல்’ விளையாட்டில் ‘50’ சவால்கள் அளிக்கப்படுகிறது.

ரெயில் பாதையில் ரெயில் வரும் போது நின்று செல்பி எடுப்பது, பேய் படம், ஆபாச படம் பார்ப்பது, நடுநிசியில் மயானம் செல்வது என தினம் ஒரு சவால் விடுக்கப்படுகிறது. 50-வது நாள் விளையாடுபவர்கள் தற்கொலை செய்ய தூண்டப்படுகிறார்கள். இதனால் ‘புளூவேல்’ விளையாட்டு அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் புளூ வேல் விளையாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பல மாணவர்களும், வாலிபர்களும் இந்த விளையாட்டிற்கு அடிமையாகி தங்கள் உயிரை இழந்து வருகின்றனர். இந்த விளையாட்டிர்கு அடிமையானவர்களை போலீசார் மீட்டு ஆலோசனை அளித்து வருகின்றனர்.

மேற்குவங்க மாநிலத்தின் ஹவுரா மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பள்ளி மாணவர்கள் இந்த விளையாட்டை விளையாடி வந்துள்ளனர். அவர்கள் மூவரும் வெவ்வேறு கட்டங்களில் இருந்துள்ளனர். இதில் ஒரு மாணவன் நேற்று, தனது பள்ளியின் இரண்டாவது மாடியில் இருந்து தற்கொலைக்கு முயன்றுள்ளான். இதையடுத்து, போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக அந்த மாணவனுக்கு பெரிய அளவிலான காயம் ஏற்படவில்லை.

அதைத்தொடர்ந்து, அந்த பள்ளிக்கு விரைந்த போலீசார் தற்கொலைக்கு முயன்ற மாணவனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், அந்த மாணவன் மற்றும் அவனது இரண்டு நண்பர்களும் புளுவேல் விளையாட்டிற்கு அடிமையாகி இருப்பது தெரியவந்தது. அவர்கள் கைகளில் இந்த விளையாட்டின் சின்னத்தை வரைந்துள்ளதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, அவர்கள் மூவரையும் காவல்நிலையம் அழைத்து சென்ற போலீசார் அறிவுரை கூறி அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News