செய்திகள்

தமிழகத்திற்கு விலக்கு இல்லை: நீட் அடிப்படையில் தான் மருத்துவ மாணவர் சேர்க்கை - சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Published On 2017-08-22 10:07 GMT   |   Update On 2017-08-22 10:07 GMT
தமிழகத்தில் இந்த ஆண்டு நீட் தேர்வின் அடிப்படையில்தான் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்க வகை செய்யும் அவசர சட்ட வரைவை தமிழக அரசு மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. இதற்கு அனுமதி அளிக்கலாம் என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கருத்து தெரிவித்ததையடுத்து 3 அமைச்சகங்கள் ஒப்புதலும் அளித்து விட்டன. எனவே, அவசர சட்டத்தற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில், நீட் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள், அவசர சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கலந்தாய்வை உடனடியாக நடத்த உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் நளினி சிதம்பரமும் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு கடந்த 17-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தில் எடுக்கப்படும் முடிவுகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இரு தரப்பினரும் பாதிக்காத வகையில் மாணவர் சேர்க்கை எவ்வாறு நடத்தப்படும்? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நீட் தேர்வில் இருந்து ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என தெரிவித்தார். மேலும், தமிழக அரசின் அவசர சட்ட வரைவை ஏற்க முடியாது என்றும் மத்திய அரசு தெரிவித்தது.



இதையடுத்து, நீட் தேர்வின் அடிப்படையில் தான் தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என கூறிய உச்ச நீதிமன்றம், மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை உடனடியாக தொடங்க வேண்டும் என உத்தரவிட்டது. செப்டம்பர் 4-ம் தேதிக்குள் கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News