செய்திகள்

புதிய 50 ரூபாய் நோட்டு - விரைவில் வெளியிட ரிசர்வ் வங்கி திட்டம்

Published On 2017-08-18 18:41 GMT   |   Update On 2017-08-18 18:42 GMT
புதிய வடிவமைப்புடன் அச்சடிக்கப்பட்டுள்ள 50 ரூபாய் நோட்டுகளை விரைவில் மக்களின் புழக்கத்திற்கு வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுடெல்லி:

கடந்தாண்டு நவம்பர் மாதம் பழைய 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. அதற்கு பதிலாக புதிதாக அச்சடிக்கப்பட்ட 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன.

கடந்த சில நாட்களாக நீல நிறம்கொண்ட புதிய 50 ரூபாய் நோட்டுகளின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த புதிய 50 ரூபாய் நோட்டுகள் புத்தாண்டு முதல் புழக்கத்துக்கு வரும் என்றும் கூறப்படுகிறது என்றும் தகவல்கள் பரவியது.

இந்நிலையில், புதிய 50 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிடுகிறது என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

மகாத்மா காந்தியின் புகைப்படத்துடன் வெளிவரும் இந்த ரூபாய் நோட்டின் பின்புறம், தென்னிந்தியாவை சேர்ந்த வரலாற்று சின்னமான ஹம்பி தேர் புகைப்படம் இடம்பெற்று உள்ளது. புதிய நோட்டு வெளியானாலும் இப்போது நாட்டில் புழக்கத்தில் உள்ள அனைத்து 50 ரூபாய் நோட்டுக்களும் தொடர்ந்து செல்லும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News