செய்திகள்

பார்சிலோனா தாக்குதலில் இந்தியர்கள் பாதிக்கப்பட்டதாக தகவல் இல்லை - சுஷ்மா ஸ்வராஜ்

Published On 2017-08-18 00:40 GMT   |   Update On 2017-08-18 00:40 GMT
ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பாதசாரிகள் மீது வேனை மோதவிட்டு நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர்கள் யாரும் பாதிக்கப்பட்டதாக தகவல் வரவில்லை என வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பாதசாரிகள் மீது வேனை மோதவிட்டு நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர்கள் யாரும் பாதிக்கப்பட்டதாக தகவல் வரவில்லை என வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் உள்ள லாஸ் ராம்ப்லாஸ் என்ற சுற்றுலா பகுதியில் இருக்கும் ப்லகா கடலுன்யா பிளாசா அருகே பாதசாரிகள் சாலையை கடந்து கொண்டிருந்தனர். அப்போது, திடீரென அங்கு வந்த வேன் ஒன்று பாதசாரிகள் மீது பயங்கரமாக மோதியது. இதனால், அங்கு கடும் பதற்றமான சூழ்நிலை நிலவியது.



மக்கள் மீது வேனை மோதவிட்டு அதனை ஓட்டி வந்தவன் தப்பி ஓடிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கோர தாக்குதலில் 13 பொதுமக்கள் பலியானதாகவும், 30-க்கும் அதிகமானோர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

இது தீவிரவாத தாக்குதல்தான் என தெரிவித்துள்ள போலீசார், இரண்டு பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில், பார்சிலோனா தாக்குதலில் இந்தியர்கள் யாரும் காயமடைந்துள்ளதாக எந்த தகவலும் வரவில்லை என மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும், ஸ்பெயினில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் தனது ட்விட்டரில் சுஷ்மா தெரிவித்துள்ளார். ஸ்பெயினில் உள்ள இந்தியர்களை தொடர்பு கொள்ள +34-608769335 என்ற அவசர உதவி எண்களை வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
Tags:    

Similar News