செய்திகள்

டெல்லியில் பிரதமர் மோடியுடன் காஷ்மீர் முதல்-மந்திரி மெகபூபா சந்திப்பு

Published On 2017-08-11 19:47 GMT   |   Update On 2017-08-11 19:47 GMT
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தொடர்ந்து வழங்க வேண்டும் என டெல்லியில் பிரதமர் மோடியை காஷ்மீர் முதல்-மந்திரி மெகபூபா நேற்று சந்தித்து பேசினார்.
புதுடெல்லி:

டெல்லியில் பிரதமர் மோடியை காஷ்மீர் முதல்-மந்திரி மெகபூபா நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 15 நிமிடம் நீடித்தது.

இதன்பிறகு நிருபர்களை சந்தித்த மெகபூபா கூறியதாவது:-

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவில் மாற்றம் செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பிரிவில் எக்காரணம் கொண்டும் மாறுதல் செய்யக்கூடாது. தற்போதுள்ள நிலையே நீடிக்கவேண்டும். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவு தொடர வேண்டும் என்ற அடிப்படையில்தான் மக்கள் ஜனநாயக கட்சியும், பா.ஜனதாவும் சட்டசபை தேர்தலுக்கு பின்பு கூட்டணி அமைத்தன. எனவே இதில் எந்த எதிர் கருத்தும் கூடாது. இதைத்தான் பிரதமரை சந்தித்தபோது வலியுறுத்தினேன். அவரும் சாதகமான பதிலையே தெரிவித்தார். கூட்டணியின் குறைந்த பட்ச செயல் திட்டத்துக்கு 100 சதவீத ஆதரவையும் அவர் அளிப்பதாக உறுதி கூறினார். காஷ்மீரில் தற்போது நிலைமை மேம்பட்டு வருவதை பிரதமரிடம் கூறி இதுபோன்ற நிலையில் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து விடக்கூடாது எனவும் வலியுறுத்தினேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 
Tags:    

Similar News