செய்திகள்

ஜம்மு-காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் ஹிஸ்புல் முஜாகிதின் தீவிரவாதி சுட்டுக் கொலை

Published On 2017-08-04 03:13 GMT   |   Update On 2017-08-04 03:13 GMT
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் ஹிஸ்புல் முஜாகிதின் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் தீவிரவாதிகள் சிலர் முகாமிட்டுள்ளதாக நேற்று நள்ளிரவு பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைதொடர்ந்து, மத்திய ரிசர்வ் படையினரும், ஜம்மு-காஷ்மீர் மாநில போலீசாரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பிஜ்பெஹரா பகுதியில் பதுங்கியிருந்த சில தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி சுட தொடங்கினர்.

அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிகளால் சரமாரியாக  சுட்டனர். இதில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். அவனுடன் இருந்த மற்ற தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இது தொடர்பாக பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறுகையில், ’’அனந்தநாக் பகுதியில் நடந்த என்கவுண்டரில் ஹிஸ்புல் முஜாகிதின் தீவிரவாதி யவார் சுட்டுக் கொல்லபப்பட்டான். அவனிடம் இருந்து துப்பாக்கிகள மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்துள்ளோம். இந்த துப்பாக்கி சூடு இரண்டு மணி நேரத்துக்குமேல் நடந்தது. மேலும், அந்த வழியாக பைக்கில் சென்ற அடையாளம் தெரியாத ஒருவர் இதில் இறந்திருக்கலாம்’’ என  தெரிவித்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரில் இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற கல்வீச்சு சம்பவத்தில் யவாரும் பங்குபெற்றான் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News