செய்திகள்
சிறுமி நந்தினியை இளம்பெண் அழைத்து செல்லும் காட்சி கேமராவில் பதிவாகியுள்ளது

திருப்பதியில் சிறுமி கடத்தல்: கேமராவில் பதிவான காட்சி மூலம் விசாரணை

Published On 2017-07-25 06:14 GMT   |   Update On 2017-07-25 06:14 GMT
திருப்பதியில் 7 வயது பெண் குழந்தையை இளம்பெண் ஒருவர் கடத்தி சென்றார். அப்பகுதியில் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போலீசார், பதிவாகியுள்ள புகைப்படங்களை வெளியிட்டு தேடுதல் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
திருப்பதி:

காளஹஸ்தி அடுத்த அம்மாபாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவர் தனது மனைவி, மகள் நந்தினி (வயது 7). ஆகியோருடன் ஏழுமலையானை தரிசிக்க நேற்று மாலை திருமலை வந்தனர். அப்போது, பழைய அன்னதான கேன்டீன் பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பதற்காக, மகளை அங்கு ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு, சுரேசும், அவரது மனைவியும் சென்றனர்.

திரும்பி வந்து பார்த்த போது, நந்தினியை காணவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அப்பகுதி முழுவதும் தேடி பார்த்தனர். எங்கும் கிடைக்கவில்லை. இது குறித்து, சுரேஷ் திருமலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நந்தினியிடம் பேச்சு கொடுத்து அழைத்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

இந்த வீடியோ புகைப்படங்களை உடனடியாக வெளியிட்டு தேடுதல் பணியை போலீசார் தீவிரப்படுத்தினர்.

திருப்பதியில் இருந்து வாகனங்கள் வெளியேறும் செக்போஸ்ட், கீழே உள்ள அலிபிரி செக்போஸ்ட்களில் போலீசார் வாகனங்களை நிறுத்தி குழந்தை கடத்தி வரப்படுகிறதா? என சோதனை செய்தனர். மேலும் பஸ்களிலும் சோதனை நடத்தினர்.

திருப்பதியில் கடந்த மாதம் ஆண் குழந்தை ஒன்று கடத்தப்பட்டது. அந்த குழந்தையை போலீசார் நாமக்கல்லில் மீட்டனர். தொடரும் குழந்தை கடத்தல் சம்பவங்கள் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Tags:    

Similar News