செய்திகள்

ஜனாதிபதி தேர்தல்: ராம்நாத்து கோவிந்துக்கு சிவசேனா ஆதரவு

Published On 2017-06-20 16:19 GMT   |   Update On 2017-06-20 16:19 GMT
ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் ராம்நாத்துக்கு சிவசேனா கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.


இந்திய ஜனாதிபதியாக இருக்கும் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி அடுத்த மாதம் 17-ம்தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டுள்ளார்.

வேட்பாளர் அறிவித்த உடனேயே மகாராஷ்டிராவில் அதன் கூட்டணி கட்சியான சிவசேனா அவசர கூட்டம் நடத்தியது. பா.ஜ.க அறிவித்த வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்பின் ஜனாதிபதி தேர்தலில் வாக்கு வங்கிக்காக பா.ஜ.க. தலித் வேட்பாளரை நிறுத்தி உள்ளதாக சிவசேனா கட்சி கருதியது.



இதுகுறித்து அந்த கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே கூறுகையில் ‘‘தலித் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதற்காக மட்டுமே ஒருவரை நீங்கள் நிறுத்தினால் அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அதாவது நீங்கள் வாக்கு வங்கி மீது உங்கள் கவனம் உள்ளது. ஜனாதிபதி வேட்பாளர் ஒட்டுமொத்த நாட்டு மக்களின் நலன்கள் சார்ந்தவராக இருக்க வேண்டும்’’ என்றார்.

இதனால் பா.ஜனதாக கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான சிவசேனா எதிர்ப்பு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் உத்தவ் தாக்கரே இன்றும் தனது கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலேசனைக்குப்பின் உத்தவ் தாக்ரே கூறுகையில் ‘‘தலைவர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளோம். எங்களது ஆதரவிற்குப் பிறகு, அவரை தேர்வு செய்வதற்கு எந்த பிரச்சினையும் இருக்காது’’ என்றார்.
Tags:    

Similar News