செய்திகள்

திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது - திருமாவளவன், சீமான் கண்டனம்

Published On 2017-05-29 16:26 GMT   |   Update On 2017-05-29 16:26 GMT
மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கு சீமான், வைகோ உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை:

கடந்த மே21-ம் தேதி சென்னை மெரினாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு மே 17 இயக்கத்தினர் அழைப்பு விடுத்திருந்தனர். தடையை மீறி மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி தலைமையில் மே 17 இயக்கத்தினரும், வேல்முருகன் தலைமையில் தமிழக வாழ்வுரிமை கட்சியினரும் பேரணி நடத்த முயன்றனர். அதில் இயக்குநர் கவுதமன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மெரினாவில் அனுமதியில்லாமல் போராட்டம் நடத்தியதாக கூறி 15 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் வேல்முருகன், கவுதமன் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர். 

கைது செய்யப்பட்டவர்கள் 14-வது குற்றவியல் நீதிபதி ரோஸ்லின் துரை முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். 15 பேரையும் 29ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.



இந்நிலையில் திருமுருகன் உள்ளிட்டோரின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் அவர்கள் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது திருமுருகன் உள்ளிட்ட 4 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்தனர். 

மத்திய மாநில அரசு அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட 17 வழக்குகள் திருமுருகன் காந்தி மீது நிலுவையில் உள்ளதால் அவர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கு சீமான், வைகோ உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருமுருகன் காந்தி குண்டர்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது நேர்மையற்ற செயல் என்று இயக்குனர் கவதமன் தெரிவித்துள்ளார். இன உரிமைக்காக போராடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். 

திருமுருகன் காந்தி மீதான குண்டர் சட்டம் இனத்திற்காக போராடுபவர்களுக்கு எதிராக செயல் என்றும் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News