டெல்லி, உத்தரப்பிரதேசத்தில் வருமானவரி சோதனை: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வீடுகளில் அதிரடி
புதுடெல்லி:
வரிஎய்ப்பு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தல் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக சமீபகாலமாக வருமான வரித்துறை நாடு முழுவதும் சோதனை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் வரி எய்ப்பு புகார். தொடர்பாக டெல்லி, உத்தரப்பிரதேசத்தில் 15 இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினார்கள்.
உத்தரபிரதேசத்தில் உள்ள லக்னோ, நொய்டா, கிரேட்டர் நொய்டா, மீரட், பகாபட், மெய்ன்பூரி, மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் இன்று காலை முதல் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அரசு உயர் அதிகாரிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
ஐ.ஏ.எஸ். அதிகாரி சங்கர் திவாரி (சுகாதார துறை இயக்குனர்), மற்றொரு ஐ.ஏ.எஸ் அதிகாரி வி.கே.சர்மா (கிரேட்டர் நொய்டா கூடுதல் தலைமை செயல் அதிகாரி) அவரது மனைவியும் மண்டல போக்குவரத்து அதிகாரியுமான மம்தா சர்மா மற்றும் சிறைத்துறை சிறப்பு செயலாளர் எஸ்.கே.சிங் ஆகியோர் சோதனை நடத்தப்பட்டவர்களில் முக்கியமானவர்கள்.
இந்த சோதனையின் போது வரிஎய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.
கடந்த மாதம் தான் உத்தர பிரதேசத்தில் அரசு உயர் அதிகாரிகள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. தற்போது 2-வது முறையாக சோதனை நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்ததுக்கது.