விவசாயி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி
- திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது
- எங்கள் வீட்டின் முன்பாக பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்காக பள்ளம் தோண்டி சுற்றுச் சுவர் கட்ட ஏற்பாடு செய்துவிட்டார்கள்
திருச்சி:
திருச்சி மாவட்டம் லால்குடி கூடலூர் பகுதியை சேர்ந்தவர் சிவனேசன். இவர் தன்னுடைய மனைவி மற்றும் மகனுடன் திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். அப்போது திடீரென கையில் மறைத்து வைத்திருந்த மண்எண்ணை பாட்டிலை எடுத்து தலையில் ஊற்றி தீ வைக்க முயன்றார்.
அப்போது அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் பொன்னுசாமி, தீக்குளிக்க முயன்ற சிவநேசனை தடுத்து நிறுத்தினார்.
இதுகுறித்து சிவநேசன் கூறுகையில், நான் திருச்சி மாவட்டம் லால்குடி கூடலூர் பகுதியில் பாரம்பரியமாக விவசாயம் செய்து கொண்டு எங்களது குடும்ப இடத்தில் வாழ்ந்து வருகிறேன்.
எங்கள் வீட்டின் அருகே அரசு பள்ளி 12 வருடமாக செயல்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக அரசு பள்ளியின் சுற்றுச்சுவர் கட்டப்போவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்து வந்தனர்.
எங்கள் வீட்டின் முன்பாக பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்காக பள்ளம் தோண்டி சுற்றுச் சுவர் கட்ட ஏற்பாடு செய்துவிட்டார்கள்.
இதனால் எங்கள் வீட்டிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எங்கள் குழந்தைகளும் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது.இதனால் மனவேதனையில் இருந்த நான் இன்று குடும்பத்தோடு திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டேன்.
எங்களது குறைகளை குறித்து கலெக்டரிடம் தெரிவிப்போம். அவர் எங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்றார். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் திடீரென்று பரபரப்பு ஏற்பட்டது.