திருச்சி முகாம் சிறையில் மரத்தில் ஏறி கைதிகள் போராட்டம்
- முகாம் சிறையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உள்ளூர் போலீசார் துணை ஆணையர்கள் தலைமையில் 150-க்கும மேற்பட்ட போலீசார் சிறை முகாமில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
- செல்போன்களை உடனடியாக தராவிட்டால் தற்கொலை செய்து கொள்வோம் என்று கூறி அங்குள்ள மரங்களில் ஏறி மிரட்டல் விடுத்தனர்.
திருச்சி,
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள வெளிநாட்டு கைதிகளுக்கான முகாமில் அதிக அளவில் செல்போன் பயன்பாடு மற்றும் போதை பொருட்கள் புழங்கி வருவதாக கிடைத்த தகவலின் பேரில் கடந்த மாதம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில் மீண்டும் முகாம் சிறையில் தங்கியுள்ள 156 பேரில் பெரும்பாலானவர்கள் செல்போன்கள் பயன்படுத்தி வருவதாக தகவல் கிடைத்தது. மேலும் கூர்மையான ஆயுதங்களும் அவர் பதுக்கி வைத்திருப்பதாக வெளியான தகவலின் பேரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உள்ளூர் போலீசார் துணை ஆணையர்கள் தலைமையில் 150-க்கும மேற்பட்ட போலீசார் சிறை முகாமில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
இதில் 150-க்கும் மேற்பட்ட செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கைதிகள் செல்போனை மீண்டும் தரக்கோரி கண்ணாடிகளை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இன்று மீண்டும் அவர்கள் போராட்டம் நடத்தினர். செல்போன்களை உடனடியாக தராவிட்டால் தற்கொலை செய்து கொள்வோம் என்று கூறி அங்குள்ள மரங்களில் ஏறி மிரட்டல் விடுத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.