உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

நில ஆவண சான்றிதழ்களை சமர்ப்பித்து பிரதமரின் கவுரவ ஊக்கத்தொகை பெறலாம்

Published On 2022-07-20 06:22 GMT   |   Update On 2022-07-20 06:22 GMT
  • பி.எம்.,கிசான் ஐ.டி.,யில் இணைத்துக் கொள்ள வேண்டும்.
  • வங்கிக்கணக்கு புத்தக முன்பக்க நகல் உள்ளிட்ட விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

திருப்பூர்:

பிரதமரின் கவுரவ ஊக்கத்தொகை திட்டத்தில், சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது.விவசாயிகள் விண்ணப்பம் அளித்ததன் அடிப்படையில் சில ஆண்டுகளாக கவுரவ ஊக்கத்தொகை, 3 தவணைகளாக வழங்கப்படுகிறது.அவசரகதியில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டதால், விவசாய நிலம் இல்லாதவர்கள், வருமான வரி செலுத்துபவர்களும் இத்திட்டத்தில் ஊக்கத்தொகை பெற்றுள்ளனர்.அதனை தொடர்ந்து ஆண்டுதோறும் பயனாளிகள் பட்டியல், மீண்டும் சரிபார்த்து, ஊக்கத்தொகை விடுவிக்கப்படுகிறது.

இந்தாண்டும் விவசாயிகள் விபரம் சரிபார்க்கப்படுவதால் விவசாயிகள் உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டுமென, வேளாண்துறை அறிவித்துள்ளது.

சிட்டா, ஆதார் அட்டை, வங்கிக்கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் அளவு போட்டோ போன்ற ஆவணங்களை வேளாண்துறை அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டுமென அறிவிப்பு செய்யப் பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து ஒன்றியங்களைச்சேர்ந்த விவசாயிகளும், தங்கள் நில ஆவணம் தொடர்பான சான்றிதழ்களை, வேளாண் அலுவலர்களிடம் வழங்கி அடுத்த தவணை ஊக்கத்தொகையை பெற்றுக்கொள்ளலாம் என வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவிநாசி வேளாண்மை உதவி இயக்குனர் அருள்வடிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அவிநாசி வட்டாரத்தில், பிரதமரின் கவுரவ ஊக்கத் தொகையாக ஆண்டுக்கு 6,000 ரூபாய் பெறும் விவசாயிகள், தங்களது நில உரிமைச் சான்றிதழ்களை, அவிநாசி வேளாண்மை துறை அலுவலகத்தில் சமர்ப்பித்து தங்களை, பி.எம்.,கிசான் ஐ.டி.,யில் இணைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு இணைத்துக் கொண்டவர்களுக்கு மட்டுமே, கவுரவ ஊக்கத்தொகை வழங்கப்படும்.போலி பயனாளிகள், விவசாய நிலம் இல்லாதவர்கள், வருமான வரி செலுத்துபவர்கள் என திட்டத்தில் இணைந்துள்ள தகுதியற்றவர்களை நீக்க இப்பணி நடக்கிறது. விவசாயிகள், நிலத்தின் சிட்டா, ஆதார் அட்டை நகல், போட்டோ, வங்கிக்கணக்கு புத்தக முன்பக்க நகல் உள்ளிட்ட விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News