மாணவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் முழுமையாக குணமடைந்து பள்ளிக்கு வர வேண்டும் - ஆசிரியர்கள் அறிவுறுத்தல்
- காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் முழுமையாக குணமடைந்து பள்ளிக்கு வர அறிவுறுத்தப்படுகிறது.
- காய்ச்சல் பாதிப்பு இருந்து காலாண்டு தேர்வை எழுதவில்லையெனில், மருத்துவ சான்று பெறப்பட்டு, தேர்ச்சிக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
உடுமலை:
தற்போது நிலவும் சீதோஷ்ண நிலையால் காற்றின் வாயிலாக பரவும் வைரஸ்களால் காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கிறது.இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்படைகின்றனர். அந்த வரிசையில், மாணவ, மாணவிகள் எவரேனும் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானால், டாக்டரிடம் சிகிச்சை பெற்று, முழுமையாக குணமடைந்து பள்ளிக்கு திரும்ப அறிவுறுத்தப்படுகிறது.
இது குறித்து திருப்பூர் மாவட்ட பள்ளித்தலைமையாசிரியர்கள் கூறியதாவது:-
காய்ச்சல் அறிகுறி தென்பட்டால், டாக்டரின் பரிந்துரைக்கு சிபாரிசு செய்யப்படுகிறது. அதேபோல, மாணவர் யாரேனும் பள்ளிக்கு வரவில்லை என்றால் அதற்கான காரணம் கேட்டறியப்படுகிறது. தற்போது, ஒவ்வொரு பள்ளியிலும் மொத்த வருகையில் 5 சதவீதம் அளவில் மாணவர்கள் ஆப்சென்ட் ஆகி வருகின்றனர்.இதனால் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் முழுமையாக குணமடைந்து பள்ளிக்கு வர அறிவுறுத்தப்படுகிறது.
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் தும்மினாலோ, இருமினாலோ அவரது சளித்துகள்கள் காற்றில் கலந்துவிடும். இதனை அருகில் உள்ளவர்கள் சுவாசிக்கும் போது எளிதாக பாதிக்கப்படுகின்றனர். இதனை தடுக்கவே, இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.காய்ச்சல் பாதிப்பு இருந்து காலாண்டு தேர்வை எழுதவில்லையெனில், மருத்துவ சான்று பெறப்பட்டு, தேர்ச்சிக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.