பள்ளி மாணவர்கள் தரையில் படுத்து மறியல்
- மது போதையில் வரும் ஆசிரியரை மாற்ற கோரி நடந்தது
- நாட்டறம்பள்ளியில் பரபரப்பு
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த கூத்தாண்டகுப்பம் அருகே சஞ்சீவினூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல் பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் சஞ்சீவினூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 135 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் கிரிஜா என்பவர் தலைமை ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். மேலும் இப்பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மது போதையில் வருவதாகவும் மேலும் இவரது மனைவி உடன் வந்து மாணவர்களுக்கு பாடம் நடத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் அப்பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பள்ளி ஆசிரியர் மாற்றக்கோரி ஊராட்சி மன்ற தலைவர் ஜோலார்பேட்டை உதவி தொடக்க கல்வி அலுவலரிடம் மனு கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் ஆசிரியர் மற்றும் தலைமைஆசிரியரை மாற்ற வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால்தகவல் அறிந்ததும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் தலைவர் குமார் மற்றும் பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் மது போதையில் வரும் ஆசிரியரை உடனடியாக மாற்ற வேண்டும் மேலும் பள்ளி தலைமையாசிரியர் கிரிஜாவை மாற்றக் கூடாது என வலியுறுத்தி சஞ்சீவினூர் மல்லக்குண்டா செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியல் ஈடுபட்ட பெற்றோர்கள் மற்றும் மாணவர்களை பேச்சு வார்த்தை நடத்தி கல்வி அதிகாரியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் அங்கிருந்து பொது மக்கள் மற்றும் மாணவர்கள் கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.