தீ விபத்தில் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்த அரசு அலுவலருக்கு பாராட்டு
- தீ விபத்தில் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்த அரசு அலுவலரை அதிகாரிகள் பாராட்டினர்.
- சமையலறை கூரை கொட்டகையில் எதிர்பாராத விதமாக தீப்பற்றியது.
ஆர்.எஸ்.மங்கலம்,
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள பாரனூர் ஊராட்சி கைலாச சமுத்திரம், இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மனைவி லட்சுமி. இருவரும் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகின்றனர்.
நேற்று 2 பேரும் வேலைக்கு சென்றுவிட, அவர்களது மகள் நந்தினி ஈஸ்வரி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார்.
அப்போது சமையலறை கூரை கொட்டகையில் எதிர்பாராத விதமாக தீப்பற்றியது. சிறிது நேரத்தில் தீ வேகமாக பரவியது. இதனால் நந்தினி ஈஸ்வரி செய்வதறியாது தவித்தார்.
அப்போது அந்த வழியாக வந்த ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா அலுவலக நில அளவை சார் ஆய்வாளர் வீரகாமேஸ்வரன் வீட்டில் தீப்பற்றி எரிவதை பார்த்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். மேலும் அங்குள்ளவர்களை உதவிக்கு அழைத்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
வீட்டில் தீ கொழுந்து விட்டு எரிய அங்கிருந்த சிலிண்டரை வீரகாமேஸ்வரன் துணிச்சலாக சென்று அப்புறப்படுத்தி வெளியே எடுத்து வந்தார். அதன் பின் பொதுமக்கள் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது.
தீயை அணைக்க விரைந்து செயல்பட்ட வீரகாமேஸ்வரனுக்கு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.