உள்ளூர் செய்திகள்

தஞ்சை வாலிபருக்கு தனியார் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் - நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் உத்தரவு

Published On 2022-06-21 08:56 GMT   |   Update On 2022-06-21 08:56 GMT
  • பிரிண்டருடன் கூடிய ஜெராக்ஸ் எந்திரத்தை கடந்த 2017-ம் ஆண்டு கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் கடையில் ரூ.67 ஆயிரம் கொடுத்து வாங்கினார்.
  • தொடர்ச்சியான பழுதால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் இழப்பீடாக அந்த நிறுவனம் ரூ.4 லட்சம் தர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

தஞ்சாவூர்:

தஞ்சை பூக்கார விளார் ரோட்டை சேர்ந்தவர் உமர்முக்தர் (வயது 33) வக்கீல். இவர் தஞ்சை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர் சங்கத்தில் தேவைக்காக ஜெராக்ஸ் கடை ஒன்றை வேலை ஆட்கள் மூலம் நடத்த முடிவு செய்தார்.

இதற்கான பிரிண்டருடன் கூடிய ஜெராக்ஸ் எந்திரத்தை கடந்த 2017-ம் ஆண்டு கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் கடையில் ரூ.67 ஆயிரம் கொடுத்து வாங்கினார். ஆனால் வாங்கிய சில நாட்களில் அந்த எந்திரம் பழுதானது. இதையடுத்து சம்பந்த பட்ட கடை நிறுவனத்துக்கு உமர்முக்தர் தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அந்த நிறுவனம் சார்பில் எந்திரம் சர்வீஸ் செய்யப்பட்டது. ஆனால் தொடர்ந்து பழுது ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து கேட்டபோது அந்நிறுவனத்திடம் இருந்து சரியான பதில் வரவில்லை. இதனால் மன உளைச்சல் அடைந்த உமர்முக்தர் தனது நண்பர் வழக்குறைஞரான விக்னேசுடன் இணைந்து தஞ்சை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடுத்தார்.அதில் ஜெராக்ஸ் எந்திரம் வாங்கிய செலவை விட பழுது பார்ப்பதற்கு ஆகி உள்ளது. தொடர்ச்சியான பழுதால் மன உளைச்சலுக்கு ஆளானேன். எனவே இழப்பீடாக அந்த நிறுவனம் ரூ.4 லட்சம் தர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் மோகன்தாஸ் பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். அதில் பாதிக்கப்பட்ட உமர்முக்தருக்கு, சம்ப ந்தபட்ட நிறுவனம் இழப்பீ டாக ரூ.32 ஆயிரம் ஆண்டொன்றிற்கு வட்டி யாக 9 சதவீதம் சேர்த்து இம்முறையீடு தாக்கல் செய்த தேதியான கடந்த 2019 முதல் இந்த மாதம் 8-ந் தேதி வரையில் வழங்க வேண்டும்.

மேலும் மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு ரூ.10 ஆயிரமும், வழக்கு செலவு தொகையாக ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.47 ஆயிரத்தை 6 வார காலத்துக்குள் சம்பந்தபட்ட நிறுவனம் வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

Tags:    

Similar News