உள்ளூர் செய்திகள்
தென்காசி அருகே ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதல்; பெண் பலி
- கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டியை அடுத்த திரிகூடபுரத்தை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி முனியம்மாள்(வயது 32).
- ஆய்க்குடி அருகே சென்றபோது எதிரே வந்த மற்றொரு ஆட்டோவும், முனியம்மாள் வந்த ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியது.
நெல்லை:
கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டியை அடுத்த திரிகூடபுரத்தை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி முனியம்மாள்(வயது 32).
இவர் அப்பகுதியில் உள்ள மாட்டு எலும்பு அரவை தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். நேற்று வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்காக அந்த வழியாக வந்த ஆட்டோவில் ஏறி சென்றார். ஆய்க்குடி அருகே சென்றபோது எதிரே வந்த மற்றொரு ஆட்டோவும், முனியம்மாள் வந்த ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியது.
இதில் ஆட்டோவின் கம்பி வளைந்து முனியம்மாளின் கழுத்தில் குத்தியது. இதில் படுகாயம் அடைந்த அவரை தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுதொடர்பாக ஆய்க்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.