கோவையில் கள்ளக்காதலனை கணவருடன் சேர்ந்து தாக்கிய இளம்பெண்
- இளம்பெண் “என்னால் இங்கு இருக்க பிடிக்கவில்லை. உன்னுடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன்.” என கூறினார்
- இளம் பெண்ணின் கணவர் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் சேர்ந்து வாலிபரை பீர் பாட்டிலால் தாக்கினர்.
கோவை:
கோவை சவுரிபாளையத்தை சேர்ந்தவர் 23 வயது வாலிபர். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார்.
இந்த நிலையில் அதே நிறுவனத்தில் வேலை பார்த்த திருமணமான இளம்பெண் ஒருவருடன் வாலிபருக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி வெளியே சென்று ஜாலியாக இருந்து வந்தனர்.
இந்த நிலையில் இந்த கள்ளக்காதல் விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வரவே அவர் தனது மனைவியை கண்டித்தார். மேலும், வாலிபரை அழைத்து எச்சரித்தார். இதனால் கடந்த சில நாட்களாக இருவரும் பேசாமல் இருந்து வந்தனர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாலிபரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட இளம்பெண் "என்னால் இங்கு இருக்க பிடிக்கவில்லை. உன்னுடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன்." என கூறினார்.சம்பவத்தன்று வாலிபரை தொடர்பு கொண்ட இளம் பெண் சவுரிபாளையம் கருணாநிதி நகர் அருகே நிற்பதாக கூறினார்.
இதையடுத்து வாலிபர் அங்கு சென்றார். அங்கு நின்று கொண்டிருந்த இளம் பெண்ணின் கணவர் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் சேர்ந்து வாலிபரை பீர் பாட்டிலால் தாக்கினர்.
பின்னர் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதுகுறித்து வாலிபர் பீளமேடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் இளம்பெண், அவரது கணவர், மற்றும் சகோதரர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.