உள்ளூர் செய்திகள்

லாரியின் முன்பக்கம் சேதமடைந்திருக்கும் காட்சி.

தென்காசி அருகே பழுதாகி நின்ற பஸ் மீது மோதிய லாரி

Published On 2023-06-01 09:08 GMT   |   Update On 2023-06-01 09:08 GMT
  • கேரளாவிற்கு கனிம வளங்களை ஏற்றி வந்த கனரக லாரி, தனியார் பஸ்சின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது.
  • இதில் பஸ்சை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மெக்கானிக் காயமடைந்தார்.

தென்காசி:

தென்காசி அருகே உள்ள திரவியநகர் பகுதியில் தனியார் பஸ் ஒன்று பழுதானதால் அதன் டிரைவர் சாலை ஓரம் பஸ்சை நிறுத்திவிட்டு மெக்கானிக்கை வரவழைத்து அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக கேரளாவிற்கு கனிம வளங்களை ஏற்றி வந்த கனரக லாரி, தனியார் பஸ்சின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மெக்கானிக் காயமடைந்தார். மேலும் மெக்கானிக்கின் மோட்டார் சைக்கிளும் சேதமடைந்தது. இந்த விபத்தில் லாரியின் முன்பக்கமும் சேதம் அடைந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாவூர்சத்திரம் போலீசார் விபத்தை ஏற்படுத்திய கனிமவள லாரியின் டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டனர். லாரி ஓட்டுநர் தூக்கத்தில் சாலையோரம் நின்ற தனியார் பஸ் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. தென்காசி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்களை ஏற்றி செல்லும் கனரக லாரிகள் கடையம்-தென்காசி சாலையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். அவை அசுர வேகத்தில் வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே விதிகளுக்கு புறம்பாக அதிகளவில் கனிம வளங்களை ஏற்றி செல்வதோடு மட்டுமின்றி அசுர வேகத்திலும் செல்லும் லாரிகள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News