ஆக்கிரமிப்பால் ஓடையாக மாறிய நல்லாறு
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் தளி தேவனூர் புதூர் அருகே நல்லாற்றை ஆக்கிரமிப்பு செய்து ஒரு சிலர் தென்னை மரங்களை நடவு செய்து உள்ளனர். இதனால் பரந்து விரிந்த பரப்புடைய நல்லாறு படிப்படியாக ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி சிறு ஓடை போன்று காட்சி அளித்து வருகிறது.
இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு தடங்கல்கள் ஏற்பட்டு உள்ளதுடன் நீராதாரங்களும் விரைவில் வறட்சியின் பிடியில் சிக்கிக் கொள்கின்றன. இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆறு முழுமையாக அழிக்கப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து நல்லாற்றில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு முன்வருவதுடன் ஆற்றை முழுமையாக தூர்வாரி முறையாக பராமரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.