தமிழ்நாடு

தென்மேற்கு வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

Published On 2024-05-22 03:47 GMT   |   Update On 2024-05-22 05:05 GMT
  • ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவா்கள் நாளைக்குள் கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்படுகிறாா்கள்.
  • தமிழகத்தையொட்டி உருவாகும் புயல் சின்னம், வருகிற 24-ந் தேதி புயலாக மாறும்போது அதற்கு 'ரிமால்' என்று பெயா் சூட்டப்படும்.

சென்னை:

தென்மேற்கு வங்கக்கடலின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது இன்று மேலும் வலுவடைந்தது. இதன் காரணமாக தென்மேற்கு மற்றும் மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காலை காற்றழுத்தத்தாழ்வு பகுதி உருவானது.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடகிழக்கு திசையில் நகா்ந்து செல்லும் என்று வானிலை இலாகா அறிவித்துள்ளது. நாளை மறுநாள் (24-ந் தேதி) காலையில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த புயல் சின்னம் இன்றும், நாளையும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டு வலுப்பெறும். அதன் பிறகு அது வடகிழக்கு திசையில் நகரக்கூடும்.

இந்தப் புயல் சின்னம் தமிழக கரையையொட்டி உருவாகி வடகிழக்கு திசையில் வங்கதேசம் நோக்கிச் செல்ல வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியிலும் இன்று முதல் (24-ந் தேதி) நாளை மறுநாள் வரை இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று முதல் நாளை மறுநாள் (24-ந் தேதி) வரை கனமுதல் மிக கனமழையும், தூத்துக்குடி, விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருப்பூா், கோயம்புத்தூா் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

வருகிற 25-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று கா்நாடக, கேரள கடல் பகுதிகள், மத்திய வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

நாளை கேரள கடலோரப் பகுதி, குமரிக்கடல் பகுதி, மன்னாா் வளைகுடா மற்றும் அதையொட்டிய தென்தமிழக கடலோரப் பகுதி, தெற்கு மற்றும் அதையொட்டிய மத்திய வங்கக்கடல் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

எனவே, மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவா்கள் நாளைக்குள் (23-ந் தேதி) கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

தமிழகத்தையொட்டி உருவாகும் புயல் சின்னம், வருகிற 24-ந் தேதி புயலாக மாறும்போது அதற்கு 'ரிமால்' என்று பெயா் சூட்டப்படும்.

இப்போதைய கணிப்புப்படி இந்த வங்கதேசம் நோக்கிச் செல்லவே வாய்ப்பு அதிகம் உள்ளது. வடகிழக்கு நோக்கி புயல் நகா்ந்துவிட்டால் தமிழகத்தில் மீண்டும் வெப்ப நிலை உயர வாய்ப்புள்ளது.

தமிழகத்தின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மிக கனமழைக்கான 'சிவப்பு எச்சரிக்கை' திரும்பப் பெறப்பட்டது.

இந்த மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு இல்லை. மிதமான, பலத்த மழைக்குத்தான் வாய்ப்புள்ளது என்பதால் சிவப்பு எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது.

Tags:    

Similar News