உள்ளூர் செய்திகள்
தக்காளி

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்தது- சதம் அடித்த தக்காளி விலை

Published On 2022-05-19 08:50 GMT   |   Update On 2022-05-19 08:50 GMT
கோயம்பேடு மார்கெட்டுக்கு தினசரி 900 டன் வரை வந்து கொண்டிருந்த தக்காளியின் வரத்து தற்போது பாதியாக குறைந்துவிட்டது.
போரூர்:

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா கர்நாடகா மாநிலங்களில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது. கடந்த சில நாட்கள் தக்காளி வரத்து குறைந்து உள்ளது. இதன் காரணமாக தக்காளி விலை ஏறுமுகத்தில் உள்ளது. இன்று 38 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது.

ஏற்கனவே தொடர் மழையால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கோயம்பேடு மார்கெட்டுக்கு தினசரி கொண்டு வரப்படும் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தற்போது வரத்து குறைந்துள்ளது. அந்த மாநிலங்களில் தற்போது தக்காளியின் தேவை அதிகரித்து உள்ளது.

இதன் காரணமாகவே கடந்த 2 வாரங்களாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் தக்காளியின் வரத்து பாதியாக குறைந்து அதன் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.80க்கு விற்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகள் ஒரு கிலோ தக்காளியை ரூ.100 வரை விற்பனை செய்தன.

இதுகுறித்து மொத்த வியாபாரி ஒருவர் கூறியதாவது:

கோயம்பேடு மார்கெட்டுக்கு தினசரி 900 டன் வரை வந்து கொண்டிருந்த தக்காளியின் வரத்து தற்போது பாதியாக குறைந்துவிட்டது. கடந்த சில நாட்களாக 450 முதல் 500 டன் அளவுக்கு மட்டுமே தக்காளி விற்பனைக்கு வருகிறது. மழை பொழிவு காரணமாக தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்து வருகிறது. இனி வரும் நாட்களில் மழை நீடிக்கும் பட்சத்தில் தக்காளி விலை மேலும் அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News