உள்ளூர் செய்திகள்
தங்கம், வைரம் நகைகளுக்கு ஆசைப்பட்டு ரூ.17 லட்சத்தை பறி கொடுத்த வாலிபர்
தங்கம், வைரம் நகைகளுக்கு ஆசைப்பட்டு ரூ.17 லட்சத்தை வாலிபர் பறி கொடுத்தார்.
சேலம்:
சேலம் கன்னங்குறிச்சி மகேந்திரபுரி பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மகன் பிரியதாஸ். இவருக்கு லண்டன் நாட்டிலிருந்து முகநூல் மூலம் ரோஸ்மேரி எமரிக் என்பவர் அறிமுகமாகி பழகிவந்துள்ளார்.
பின்னர் பிரியதாஸ் செல்போன் எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அந்த நாட்டின் 70 ஆயிரம் பவுண்ட் மதிப்புள்ள வைரம் மற்றும் தங்க பொருட்களை பரிசாக அனுப்பி உள்ளதாக கூறியுள்ளார்.
அதைத்தொடர்ந்து சில நாட்களில் பிரியதாஸ் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட ஒரு நபர் தான் கஸ்டம்ஸ் அதிகாரி என்றும் உங்களுக்கு லண்டனில் இருந்து வந்துள்ள பார்சலுக்கு சுங்க வரி கட்ட வேண்டும் என்றும் அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அனுப்ப வேண்டும் என கூறியுள்ளார்.
இதை உண்மை என்று நம்பிய பிரியதாஸ் பணத்தை அவர் கூறிய வங்கி எண்ணிற்கு பரிமாற்றம் செய்துள்ளார்.ரூ. 17 லட்சத்தை அனுப்பியதாக தெரிகிறது.
.அதன்பின்னர் எந்த பார்சலும் வராததால் அதிர்ச்சி அடைந்த பிரிய தாஸ் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
முதற்கட்ட விசாரணையில் பிரிய தாஸ் அனுப்பிய பணம் நாகலாந்தில் உள்ள வங்கிக் கணக்கிற்கு சென்றது தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசார் அந்த வங்கிக் கணக்கை முடக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.