உள்ளூர் செய்திகள்
கொலை

புளியங்குடியில் வாலிபர் அடித்துக்கொலை- தொழிலாளி கைது

Published On 2022-05-17 09:54 GMT   |   Update On 2022-05-17 09:54 GMT
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
புளியங்குடி:

தென்காசி மாவட்டம் புளியங்குடி காலாடி தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 23). இவர் கட்டிட தொழிலாளி.

இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (29). விவசாயி.

கணேசன் மனைவியிடம், பாலகிருஷ்ணன் அடிக்கடி பேசி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனை கணேசன் கண்டித்துள்ளார். ஆனாலும் பாலகிருஷ்ணன் அதை கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ஏற்கனவே கணேசனுக்கும், பாலகிருஷ்ணனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று இரவு அந்த பகுதியில் நின்று பாலகிருஷ்ணன் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த கணேசன், பாலகிருஷ்ணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே பாலகிருஷ்ணனை கணேசன் நெஞ்சில் மிதித்து கீழே தள்ளினார். பின்னர் அங்கு கிடந்த கல்லால் அவரை கடுமையாக தாக்கி உள்ளார். இதில் பாலகிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த புளியங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலகிருஷ்ணனை மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பாலகிருஷ்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துவிட்டனர்.

இதுதொடர்பாக குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News