உள்ளூர் செய்திகள்
டி.டி.வி. தினகரன்

அ.தி.மு.க பொதுச்செயலாளர் விவகாரத்தில் நல்ல தீர்ப்பு வரும்- டி.டி.வி.தினகரன்

Published On 2022-04-09 07:27 GMT   |   Update On 2022-04-09 07:27 GMT
நீட் தேர்வு, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களுக்கு அனுமதி கொடுத்தது தி.மு.க. ஆட்சியில் இருக்கும்போது தான் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
தஞ்சாவூர்:

தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் இன்று அ.ம.மு.க. சார்பில் அமைக்கப்பட்ட கோடை கால தண்ணீர் பந்தலை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் திறந்து வைத்தார். பின்னர் அவர் கட்சி கொடியேற்றி வைத்து பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

உலகம் முழுவதும் ஆங்கிலம் இணைப்பு மொழியாக உள்ளது. இந்தியாவில் அந்தந்தப் பகுதிகளில் வாழும் மக்கள் அவர்களது மொழியில் பேசுகின்றனர். இந்தியாவில் ஆங்கிலத்திற்கு மாற்றாகத்தான் இந்தி மொழி என மத்திய அமைச்சர் கூறியதாக நான் படித்தேன். மற்றப்படி ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தி மொழி என அவர் கூறியதாக எனக்கு தெரியவில்லை.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் கொடுத்த தேர்தல் வாக்குறுதிக்கு எதிராக செயல்படுகிறார். அவர் கொடுத்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பழைய ஆட்சியாளர்களை குறை கூறிக் கொண்டு இருப்பதனால் எந்த பயனும் இல்லை.

நீட் தேர்வு, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களுக்கு அனுமதி கொடுத்தது தி.மு.க. ஆட்சியில் இருக்கும்போது தான். ஜெயலலிதா முதல்வராக இருந்த சமயத்தில் மக்கள் நலன் கருதி அந்த திட்டங்களை தடுத்து நிறுத்தினார்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். இந்த விலையேற்றம் காரணமாக பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும். எனவே உடனடியாக மத்திய, மாநில அரசுகள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.

சசிகலா அ.தி.மு.க பொதுச்செயலாளர் விவகாரம் குறித்து வருகிற 11-ந் தேதி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தீர்ப்பு வர உள்ளது. அது நல்ல தீர்ப்பாக வரும் என நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News