உள்ளூர் செய்திகள்
முத்துமலை முருகன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்- ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
புத்திரகவுண்டன்பாளையத்தில் முத்துமலை முருகன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஆத்தூர்,
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புத்திரகவுண்டன்பாளையத்தில் 146 அடி உயரம் கொண்ட உலகிலேயே முத்துமலை முருகன் சுவாமி கோவிலில் நேற்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் ஹெலிகாப்டரில் மலர்தூவி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இந்த விழாவின் தொடர்ச்சியாக இன்று முருகன்,வள்ளி,தெய்வானை திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சீர்வரிசை பொருட்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
பின்னர் வேதம் முழங்க சாமி திருக்கல்யாண உற்சவம் கோவிலில் நிறுவனர் ஸ்ரீதர் குடும்பத்தார் தலைமையில் நடைபெற்றது. அதன்பின்னர் சுவாமி திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து பல்லக்கில் எடுத்து வரப்பட்டு மூலவர் சன்னதியில் வைக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர்.
பக்தர்கள் கோவில் சுற்று பிரகாரத்தை சுற்றிப் பார்வையிட்டு சாமியை வழிபட்டு சென்றனர்.