உள்ளூர் செய்திகள்
சேலம் மாவட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலையில் பச்சைப் பயறு, உளுந்து கொள்முதல்
சேலம் மாவட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலையில் பச்சைப் பயறு, உளுந்து கொள்முதல் செய்யப்படவுள்ளது.
சேலம்:
விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைத்திடவும், அவர்களின் வருவாயினை பெருக்கிடவும், தமிழக அரசு பல்வேறு உழவர் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில், பச்சைப் பயறு மற்றும் உளுந்து சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவர்கள் விளைவித்த பச்சைப்பயறு மற்றும் உளுந்து பயறு வகைகளை மத்திய அரசின் தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையத்தின் மூலம், விலை ஆதரவு திட்டத்தின்கீழ், குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய உத்தரவிடப் பட்டுள்ளது. இதன்படி, சேலம் மாவட்டத்தில் 300 மெட்ரிக் டன் பச்சைப் பயறு மற்றும் 200 மெட்ரிக் டன் உளுந்து கொள்முதல் செய்யப்படவுள்ளது.
இத்திட்டத்தில் பச்சைப்பயறு கொள்முதல் செய்திட சேலம் மற்றும் மேச்சேரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களும் மற்றும் உளுந்து கொள்முதல் செய்திட சேலம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடமும் முதன்மை கொள்முதல் நிலையங்களாக செயல் படவுள்ளது. இம்மையங்களில் பச்சைப் பயறுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலையான கிலோ ஒன்றுக்கு ரூ.72.75 மற்றும் உளுந்திற்கு குறைந்த பட்ச ஆதரவு விலையான கிலோ ஒன்றுக்கு ரூ.63 வீதம் 15.05.2022 முடிய கொள்முதல் செய்யப்படவுள்ளது.
மேலும், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பச்சைப்பயறு மற்றும் உளுந்து ஆகியவற்றிற் கான கிரையத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும்.
இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள், சிட்டா, அடங்கல், ஆதார் எண், மற்றும் வங்கி கணக்கு எண் ஆகிய விவரங் களுடன் சேலம் அல்லது மேச்சேரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் முன்பதிவு செய்துகொள்ள சேலம் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.