உள்ளூர் செய்திகள்
கொலை

மானூர் அருகே விவசாயியை வெட்டிக்கொன்ற மனைவி கைது

Published On 2022-04-02 08:39 GMT   |   Update On 2022-04-02 08:39 GMT
நெல்லை மாவட்டம் மானூர் அருகே குடும்ப தகராறில் விவசாயியை வெட்டிக்கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:

நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள பள்ளமடை கிராமத்தை சேர்ந்தவர் அம்பலம் (வயது72), விவசாயி.

இவரது மனைவி முப்பிடாதி என்ற சின்னம்மாள் (70). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். நேற்று மதியம் அம்பலம் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த அவரது மனைவி முப்பிடாதி அரிவாளால் அம்பலத்தை வெட்டினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உடனே முப்பிடாதி அங்கிருந்து தப்பியோடி விட்டார். போலீஸ் விசாரணையில் முப்பிடாதிக்கு ரத்தக்கொதிப்பு உள்ளிட்ட நோய் இருந்து வந்ததாகவும், சிக்கனம் கருதி அம்பலம் தனது மனைவிக்கு சரிவர மருந்து, மாத்திரைகள் வாங்கி கொடுக்காமல் இருந்தது தெரியவந்தது.

இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்றும் இதே போல் தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த முப்பிடாதி கணவனை வெட்டிக்கொன்றது தெரியவந்தது.

தொடர்ந்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முப்பிடாதியை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலை நெல்லை அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டு பகுதியில் அவர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News