உள்ளூர் செய்திகள்
செபஸ்தியார் சேதப்படுத்தப்பட்டதால் அந்த இடத்தை சுற்றி துணியால் மூடி வைக்கப்பட்டிருந்த காட்சி.

ஆலய நுழைவாயிலில் இருந்த செபஸ்தியார் சிலையை சேதப்படுத்திய மர்மநபர்கள்

Published On 2022-01-24 09:34 GMT   |   Update On 2022-01-24 09:34 GMT
ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆலய நுழைவாயிலில் இருந்த செபஸ்தியார் சிலையை உடைத்து சேதப்படுத்தி விட்டு சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.
கோவை:

கோவை ராமநாதபுரம் சிக்னல் அருகே டிரினிட்டி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் சென்று பிரார்த்தனை செய்து வருகின்றனர். நேற்று கொரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் ஆலயம் அடைக்கப்பட்டு இருந்தது.

நேற்று இரவு ஆலயத்தில் ஜான்சன் என்பவர் காவலாளியாக பணியில் இருந்தார். இரவு 10 மணியளவில் அந்த வழியாக 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் ஆலய நுழைவாயிலில் மோட்டார் சைக்கிளை நிறுத்தினர். திடீரென அவர்கள் ஆலய நுழைவாயிலில் இருந்த செபஸ்தியார் சிலையை உடைத்து சேதப்படுத்தி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த காவலாளி ஜான்சன் இது குறித்து ஆலய பாதிரியார் பாஸ்டின் ஜோசப்புக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அவர் விரைந்து சென்று பார்த்தார்.

பின்னர் பாதிரியார் பாஸ்டின் ஜோசப் இதுகுறித்து ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் முக கவசம் அணிந்து வந்து சிலையை உடைத்து சேதப்படுத்தும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆலய நுழைவாயிலில் இருந்த செபஸ்தியார் சிலையை உடைத்து சேதப்படுத்தி விட்டு சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.


Tags:    

Similar News