கல்லிடைக்குறிச்சியில் ரெயில் தண்டவாளத்தில் ஆண் பிணம்
கல்லிடைக்குறிச்சி:
அம்பையை அடுத்த கல்லிடைக்குறிச்சி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ரெயில் தண்டவாளத்தில் நேற்று இரவு சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார்.
இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கல்லிடைக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்த நபர் குறித்து விசாரித்தனர்.
இது தொடர்பாக தென்காசி மாவட்ட ரெயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் தலைமையிலான ரெயில்வே போலீசார் அங்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நபர் யார்? எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் குளம் ஒன்று உள்ளது. அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இயற்கை உபாதை கழிக்க அங்கு வருவார்கள்.
இதனால் தற்போது இறந்த நபர் இயற்கை உபாதை கழிப்பதற்காக அங்கு வரும் போது நேற்று மாலை செங்கோட்டையில் இருந்து நெல்லைக்கு சென்ற ரெயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.