உள்ளூர் செய்திகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆடி வீதியில் சுவாமி-அம்மன் வீதி உலா
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தைப்பூச தெப்பத்திருவிழா உள் திருவிழாவாக நடந்தது.
மதுரை
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தைப்பூச தெப்பத்திருவிழா வருடந்தோறும் நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியாக மாரியம்மன் தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும்.
மாலையில் நடக்கும் தெப்ப உற்சவத்தில் அந்தபகுதியே விழாக்கோலம் பூண்டிருக்கும். பல்லாயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் குவிந்து சாமி தரிசனம் செய்வார்கள். விழாவில் சைவ சமய நிறுவன வரலாற்று லீலை, வலைவீசி அருளிய லீலை, தெப்பம் முட்டுத்தள்ளுதல், சிந்தாமணியில் கதிரறுப்பு ஆகியவை நடக்கும்.
மதுரை மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது. நோய்பரவலை தடுக்கும் வகையில் கோவில் திருவிழாக்கள் பக்தர்களின்றி எளிமையாக நடத்தப்படுகிறது.
அதன்படி இந்த ஆண்டும் மீனாட்சி அம்மன் கோவில் தைப்பூசம் தெப்பத்திருவிழாவை கோவில் வளாகத்திலேயே எளிமையாக நடத்த முடிவு செய்யப்பட்டது. கடந்த வாரம் தெப்ப உற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவில் மண்டபத்திலேயே தினமும் சுவாமி&அம்மன் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளினர்.
விழாவில் இன்று தெப்ப உற்சவத்தை முன்னிட்டு காலையில் சுவாமி&அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது-. பக்தர்களின்றி கோவில் வளாகத்திலேயே தை தெப்பத்திருவிழா உள் திருவிழாவாக நடந்தது. வெள்ளி அவுதா தொட்டிலில் மீனாட்சி அம்மனும், வெள்ளி சிம்மாசனத்தில் பிரியாவிடையுடன் சுந்த ரேசுவரரும் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். பின்னர் ஆடி வீதியில் சுவாமி&அம்மன் வலம் வந்தனர்.