உள்ளூர் செய்திகள்
திருவள்ளூர் அருகே முதியவர் வீட்டில் தங்கம்-வெள்ளி கொள்ளை
திருவள்ளூர் அருகே முதியவர் வீட்டில் தங்கம்-வெள்ளி கொள்ளையடிக்கபட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த புட்லூர் ராமாபுரம் ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் சாம்பசிவம் (வயது 77). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்தநிலையில் நேற்று முன்தினம் சாம்பசிவம் தன் மனைவி மற்றும் குடும்பத்தாருடன் வீட்டை பூட்டிவிட்டு வேலையின் காரணமாக சென்னைக்கு சென்றார். இரவு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 2 பவுன் தங்க நகைகள், வெள்ளி தம்ளர்கள், ரூ.40 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து சாம்பசிவம் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.