உள்ளூர் செய்திகள்
குழந்தைகள் பெற்றோர் சொல் கேட்டு நடந்தால் வாழ்க்கை சிறக்கும்- ஆன்மீக சொற்பொழிவாளர் அறிவுரை
நம்மால் யாருக்கும் சிரமம் வந்துவிடக்கூடாது. இதைத்தான் ராமாயணமும் சொல்கிறது.
அவிநாசி:
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு அவிநாசி ஸ்ரீவீர ஆஞ்சநேயர் பக்த பேரவை சார்பில் வில்லிபாரத தொடர் சொற்பொழிவு நடந்து வருகிறது. இதில் திருச்சி கல்யாணராமன் பேசியதாவது:-
ராமாயாணம் போன்ற புராணங்கள் சொல்லும் வாழ்க்கை தத்துவம், வாழ்க்கைக்கு சிறப்பாக பொருந்தும். அதன்படி பிள்ளைகள், பெற்றோர் சொல் கேட்டு நடந்தால் வாழ்க்கை சிறக்கும். பூமியை காட்டிலும் உயர்வானவள் தாய்.
ஆகாயத்தை காட்டிலும் உயர்வானவர் தந்தை. காற்றை விட வேகமானது மனம். புல்லை காட்டிலும் அற்பமானது கவலை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.பணம், சொத்து ஆகியவற்றில் மனம் நாட்டம் கொள்வதால் தான், பல இடங்களில் பிரச்சினை ஏற்படுகிறது.
எந்தவொரு விஷயத்திலும் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும். நாம் பிறருக்கு தொல்லை தராமல் இருந்தால் தான் பிறரால் நமக்கு தொல்லை வராமல் இருக்கும். விரோத மனப்பான்மையை விட்டொழிக்க வேண்டும்.
நமது கடந்த கால பெருமைகளை பிள்ளைகளிடம் பேசுவதால், எந்த நன்மையும் கிடைத்து விடப்போவதில்லை. மாறாக அவர்களை நல்வழிப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.மனதை கட்டுப்பாடுடன் வைத்துக் கொள்ள வேண்டும்.
நம்மால் யாருக்கும் சிரமம் வந்துவிடக்கூடாது. இதைத்தான் ராமாயணமும் சொல்கிறது.கவலைப்படுவதால் எந்த நன்மையும் கிடைத்து விடப்போவதில்லை. பிரச்சினைக்கான தீர்வை நோக்கி செல்லவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.