உள்ளூர் செய்திகள்
கைது

செல்போன் கடையில் ரூ.20 லட்சம் கொள்ளையடித்த வடமாநில வாலிபர் கைது

Published On 2021-12-31 10:26 GMT   |   Update On 2021-12-31 10:26 GMT
கோவையில் செல்போன் கடையில் ரூ.20 லட்சம் கொள்ளையடித்த வடமாநில வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ. 9 லட்சத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் பிரதாப், ராஜூ ஆகியோர் கோவை காந்திபுரம் கிராஸ்கட் 8-வது வீதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் செல்போன் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகின்றனர்.

கடந்த 13-ந் தேதி இரவு இவர்கள் வழக்கம் போல வியாபாரத்தை முடித்துக் கொண்டு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றனர். நள்ளிரவு கடையின் ‌ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர் ஒருவர் கல்லாவில் இருந்த ரூ.20 லட்சம் பணத்தை கொள்ளையடித்து தப்பி சென்றார்.

மேலும் அந்த மர்ம நபர் அதே வணிக வளாகத்தில் உள்ள மற்றொரு மொபைல் கடையின் ‌ஷட்டரை உடைத்து உள்ளே சென்று அங்கு கல்லாவில் இருந்த ரூ.50 ஆயிரம் பணத்தையும் கொள்ளையடித்து சென்றார்.

மறுநாள் காலை கடையை திறக்க சென்ற உரிமையாளர்கள் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு பணம் கொள்ளை போய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அவர் காட்டூர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில், கொள்ளை போன பொருட்களின் மதிப்பு ரூ.20 லட்சத்து 50 ஆயிரம் என தெரியவந்தது.

மேலும் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிரீத்வி பாரதி(27) என்பவரை போலீசார் இன்று கைது செய்தனர்.

அவரிடம் இருந்து ரூ. 9 லட்சத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News