உள்ளூர் செய்திகள்
தஞ்சையில் மோட்டார் சைக்கிளை திருட முயன்ற 2 பேர் கைது
தஞ்சையில் மோட்டார் சைக்கிளை திருட முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை ஆதிமாரியம்மன்கோவில் பகுதியை சேர்ந்தவர் கீர்த்திவாசன் (வயது 25). இவர் தஞ்சை லாலிஹால் முத்தையாபிள்ளை தெருவில் உள்ள தனது நண்பர் ஒருவரின் வீட்டிற்கு மோட்டார்சைக்கிளில் வந்தார். பின்னர் மோட்டார்சைக்கிளை வீட்டின் அருகே நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது 2 பேர் மோட்டார் சைக்கிள் சைடு பூட்டை உடைத்து திருட முயற்சி செய்து கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் திருடன், திருடன் என சத்தம் போட்டார். அவருடைய சத்தம் கேட்டு 2 பேரும் தப்பி ஓட முயற்சி செய்தனர். அதற்குள் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த 2 பேரையும் பிடித்து தஞ்சை கிழக்கு போலீசில் கீர்த்திவாசன் ஒப்படைத்தார். அவர்களிடம் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி விசாரணை நடத்தியதில் அவர்கள் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பிடாரிகீழ தெருவை சேர்ந்த சங்கர் மகன் சந்தோஷ்குமார் (19), கிடாரங்கொண்டான் கிழக்கு தெருவை சேர்ந்த முரளிதாஸ் மகன் அஜய்ராஜ் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.