உள்ளூர் செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவிப்பு

Published On 2021-12-17 07:41 GMT   |   Update On 2021-12-17 10:09 GMT
தமிழ்த்தாய் வாழ்த்தை, தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

தமிழ்நாட்டின் அனைத்து விழாக்களிலும் மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய "நீராரும் கடலுடுத்த" எனும் பாடல் பாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்தை, தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

* மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவிக்கப்படுகிறது.

* தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு துவங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும்.

* தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும்.

*  தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் பாடப்படும் போது மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

* பொது நிகழ்வுகளில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ இசை வட்டுக்களைக் கொண்டு இசைப்பதைத் தவிர்த்து பயிற்சி பெற்றவர்களால் வாய்ப்பாட்டாக பாடப்பட வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



Tags:    

Similar News