உள்ளூர் செய்திகள்
பல்லடம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
மன வருத்தத்தில் இருந்த கண்ணன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் ஊராட்சி மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த முருகேசன் மகன் கண்ணன்(வயது48). இவர் கூலி தொழிலாளி ஆவார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கண்ணனுக்கு சரிவர வேலை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் மன வருத்தத்தில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். வேலைக்குச் சென்ற அவரது மனைவி விஜயலட்சுமி வீடு திரும்பியபோது கணவர் மயங்கி கிடப்பதைக் கண்டு அலறி துடித்தார்.
பின்னர் அக்கம் பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.