உள்ளூர் செய்திகள்
கைது

கோவையில் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

Published On 2021-12-11 10:52 GMT   |   Update On 2021-12-11 10:52 GMT
கோவையில் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை:

நாகர்கோவிலை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இந்த சிறுமியின் உறவினர் மகேந்திரன் (வயது28). உறவினர்கள் என்பதால் 2 பேரும் அடிக்கடி பார்த்து கொண்டதால் இருவருக்கும் இடையே நட்பு உருவானது. இந்த நட்பு காதலாக மாறியது.

இதையடுத்து மகேந்திரன் சிறுமியை அவரது பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் கொள்வதாக கூறியுள்ளார். அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெற்றோரின் சம்மதத்துடன் சிறுமியை திருமணம் செய்த அவர் பின்பு கோவைக்கு அழைத்து வந்துள்ளார்.

இங்கு வீடு வாடகைக்கு எடுத்து 2 பேரும் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து மகேந்திரன் சிறுமியை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அரசு மருத்துவமனைக்கு செல்லும் படி கூறியுள்ளனர்.

பின்னர் அவர் சிறுமியை அரசு ஆஸ்பத்தியில் சேர்த்தார். அங்கு டாக்டர்கள் பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. சிறுமி என்பதால் டாக்டர்கள் உடனடியாக கோவை மத்திய மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய மகேந்திரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News